நிரபராதியாக மீண்டும் அரசியலுக்கு வருவேன்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.

தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் இன்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தான் அரசியல் அனாதை இல்லை எனவும், அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் மக்களின் ஆதரவு அப்படியே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வர்த்தகராக தாம் சம்பாதித்த பணத்தை விட அரசியலில் ஈடுபட்டு பெறப்படும் மக்களின் அன்பு மதிப்புமிக்கது என்றும் கெஹலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நிரபராதியாக அரசியலுக்கு வருவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றாடல் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles