அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
அதற்கமைய, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே,உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல தடவைகள் குழுவின் முன் அழைக்கப்பட்டு கலந்து ரையாடப்பட்டதுடன் அங்கு பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டதாகத் தெரிவித்தார். எந்தவொரு நபரும் 15 வருடங்கள் வரி செலுத்தாமல் இருக்க முடியும் என்றும் தலைவர் மேலும் விளக்கினார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குத் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் வரிக் கோப்பினை மதிப்பிடுவதற்கு 30 மாதங்களும் மேன்முறையீடுகளை பரிசீலிப்பதற்கு மேலும் 24 மாதங்களும் உள்ளன. அதன்படி 54 மாதங்களுக்கும் மேலாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரிக் கோப்பு உள்ளது எனவும் அதன் பின்னர் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் முறையிட்டதன் பின்னர் சட்டத்தின் பிரகாரம் 2 வருடங்கள் அவகாசம் வழங்கப்பட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு, மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும், இதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள், 2023.06.30 வரை நிலுவையில் உள்ள வரி வருமானம் 943 பில்லியன் ரூபா எனவும், பல்வேறு காரணங்களால் அறவிட முடியாத தொகை 767 பில்லியன் ரூபா எனவும், அறவிடக்கூடிய தொகை 175 பில்லியன் ரூபா எனவும் தெரிவித்தனர். அத்துடன், 2023 இல் 37 பில்லியன் ரூபா வரி நிலுவை அறவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் விளக்கமளித்தனர்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வரி அறிக்கை கிடைத்தவுடன் இடம்பெறும் செயன்முறையை விளக்கிய அதிகாரிகள், வரி அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி RAMIS அமைப்பில் தகவல்களை உள்ளிட்டு சிக்கல்களை அடையாளம் கண்டு, பின்னர் ஒரு கணக்காய்வு நடத்தப்படும் எனவும் சில சந்தர்ப்பங்களில் சில தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்காக மேலதிக தகவல்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டினர்.
அவ்வாறு தகவல்கள் கோரப்படும் சந்தர்ப்பங்களில், பெரும்பாலும் செலுத்துவோர் வேண்டுமென்றே தகவல்களைத் தாமதப்படுத்துவதாகவும் அதிகாரிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர்.










