நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக தேரர்கள் போர்க்கொடி!

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரியை நீக்குமாறு பௌத்த தேரர்கள் சிலர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டுக்குள் சரிஆ சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அலி சப்ரி முயற்சிக்கிறார் எனவும், நீதி அமைச்சர் பதவியை வகிப்பதற்கு அவர் தகுதியற்றவர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தி கொழும்பில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகளும், தேரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தின்போதும் நீதி அமைச்சரை பதவி நீக்குமாறு பலராலும் கருத்து வெளியிடப்பட்டது.

அதேவேளை, இவ்வாறானதொரு பின்புலத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளார் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles