நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் 40 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (10.06.2021) ஊடகங்களிடம் தெரிவித்தவை வருமாறு,
“அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்க பணியாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை மின்சார , சபை உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசிகள் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை வலப்பனை ஹங்குரன்கெத்த அம்பேகமுவ மஸ்கெலியா உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றது. இங்குள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்படும்.
நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் கடந்த 09.06.2021 அன்று நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது 3000 பேருக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (10.06.2021) வியாழக்கிழமை கொத்மலை வலப்பனை ஹங்குரன்கெத்த அம்பேகமுவ பகுதிகளை சேர்ந்த அரச பணியாளர்கள் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் முன் பணியாளர்களுக்குமாக 6000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
எதிதிர்வரும் மூன்று தினங்களில் அதாவது 12 ஆம் திகதி 13 ஆம் திகதி 14 ஆம் திகதி ஆகிய திகதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் 98 கிராம சேவகர்கள் பிரிவில் 60 வயதிட்கு மேற்பட்ட சுமார் 40000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்களினதும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார அதிகாரிகள் உட்பட சுகாதார பிரிவினர் பொலிசார் இராணுவத்தினர் உட்பட அனைவருடைய ஒத்தழைப்பையும் பெற்றுக் கொண்டு மிகவும் அமைதியான முறையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் எந்தவதமான குழப்பங்களும் இல்லாமல் அமைதியான முறையில் வருகை தந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.மேலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வருகின்றவர்களுக்கு விசேடமான போக்குவரத்து அனுமதிகள் தேவையில்லை.
அவர்கள் நேரடியாக வருகை தந்து தங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்ற இடங்கயை கிராம அதிகாரிகள் மூலமாக அறிந்து கொண்டு அங்கே நேரடியாக வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.” – என்றார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு