ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நுவரெலியா மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ மாவட்டத்திலுள்ள 534 வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் நாளை (20) காமினி தேசிய பாடசாலைக்கு வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
நுவரெலியாவில் உள்ள பாடசாலைகள் மற்றும் நகர மண்டபங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைத்து உரிய பணிகள் செய்யப்பட்டுள்ளன. சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் உரிய முறையில் கையளிக்கப்படும்.
நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 605,292 ஆகும், இது நுவரெலியா- மஸ்கெலியா தொகுதியில் 347,646 வாக்குகள், கொத்மலை தொகுதியில் 88219 வாக்குகள், ஹகுரன்கெத்த தொகுதியில் 78,437 வாக்குகள் மற்றும் வலப்பனை தொகுதியில் 90,990 வாக்குகள் என காட்டப்பட்டுள்ளது. அதில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 19,748 ஆகும்.
இத்தேர்தல் மற்றும் தபால் வாக்கு எண்ணும் பணிகளுக்காக 21ஆம் திகதி மாலை 4 மணி முதல் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 மண்டபங்களில் 1784 பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட மேலும் தெரிவித்தார்.
தேர்தல் தினத்தன்று காமினி தேசிய பள்ளியில் நிறுவப்பட்டுள்ள 41 வாக்கு எண்ணும் மையங்களில் 6.30 மணிக்குள் மற்ற வாக்குகளை எண்ண திட்டமிடப்பட்டுள்ளது.அன்றைய தினம் நள்ளிரவுக்கு முன்னர் மாவட்டத்தின் முதலாவது தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனர்த்தங்கள் ஏதும் ஏற்படாமல் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , இதற்கு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இதுவரை 36 சிறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
எனினும் தற்போது தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
