(ராமு தனராஜா)
பசறை கமேவெல பகுதியில் பெற்றேரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இரண்டு பிள்ளைகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளது இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு.
ஏழ்மையான நிலையில் வசிப்பதற்கு வீடுகூட இன்றி வயது முதிர்ந்த பாட்டியுடன் தங்கியுள்ள பிள்ளைகளின் நிலை அறிந்து கமேவெல 5ம் கட்டையைச் சேர்ந்த R. சுரேஷ் குமார் என்பவர் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவ்வமைப்பின் தலைமையில் அவ்விரு சிறார்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு புதிதாக வீடொன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் அக்குழந்தைகளுக்கான வாழ்வாதார உதவிகளையும் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு செய்து வருகின்றது.
கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான உதவிகளையும் புதிதாக வீடொன்றையும் அமைத்து கொடுக்கும் சேவைக்கு கமேவெல பகுதி மக்களும் இளைஞர்களும் உதவும் கரங்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.