படையினரின் உயிர் தியாகத்தை காட்டிக்கொடுக்க தயாரில்லை!

ஆயிரக்கணக்கான படையினர் உயிர்த்தியாகம் செய்து பாதுகாத்த நாட்டை தேர்தல் வெற்றிக்காக காட்டிக்கொடுக்க முடியாது. அதன் அடிப்படையிலேயே அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை என தெளிவாக எடுத்துரைத்துள்ளேன் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஹபராது பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களை அச்சுறுத்தினால் அவர்கள் வெளியில் இறங்கமாட்டார்கள் என சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர்.

மொட்டு கட்சி வெற்றிபெறாது என ஒரு புறத்தில் கூறினாலும் மறுபுறத்தில் மொட்டு கட்சி கூட்டத்துக்கு செல்லவேண்டாம் என கட்சி ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.  மொட்டு கட்சி தோற்கும் எனில் எதற்காக இப்படி அஞ்ச வேண்டும்?

மொட்டு கட்சிக்கு வாக்குகள் இல்லையெனில் கூட்டத்துக்கு வரும் மக்களை ஏன் மிரட்ட வேண்டும்? இதன்மூலம் எமது வெற்றி உறுதியாகியுள்ளது. நாம்தான் பலமான அரசியல் கட்சியென்பதும் உறுதியாகியுள்ளது. நாம் அஹிம்சை வழியிலேயே தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றோம்.

வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் காலங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்கள் பிரச்சினை தீரப்போவதில்லை.  அதனால்தான் செய்யக்கூடிய விடயங்களை மட்டும் கூறிவருகின்றோம். அந்த அடிப்படையிலேயே எம்மால் அதிகாரங்களை பகிரமுடியாது என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். 13 இல் பொலிஸ் அதிகாரத்தை வழங்கமுடியாது.

ஆயிரக்கணக்கான படையினர் உயிர்தியாகம் செய்து வென்றெடுத்த சுதந்திரத்தை, நாட்டை தேர்தல் வெற்றிக்காகவும், வாக்கு வேட்டைக்காகவும் காட்டிக்கொடுக்க முடியாது.

வடக்கு இளைஞர்கள் வெளிப்படைதன்மையை வரவேற்கின்றனர் என நான் நம்புகின்றேன். பொய் வாக்குறுதிகளை அவர்கள் விரும்புவதில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles