ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் சம்பந்தமாக வெளியக விசாரணை பொறிமுறைக்கு வலுசேர்க்கும் வகையிலேயே பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவில் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் பிரிவினைவாத டயஸ்போராக்கள் சூழ்ச்சியாகவே , பல வருடங்களுக்கு பிறகு தற்போது அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டமை தொடர்பில் நேரடி சாட்சியம் இருப்பதாக நபரொருவர் கூறியுள்ளார். சந்திரிக்கா ஆட்சியில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முக்கிய அமைச்சராக இருந்தார். அப்போது பட்டலந்த அறிக்கை தொடர்பில் ஏன் பேசப்படவில்லை, அறிக்கை வெளியிடப்படவில்லை?
மைத்திரிபால சிறிசேன ஆட்சிகாலத்திலும் ஊழல் ஒழிப்பு பிரிவில் அநுர முக்கிய வகிபாகத்தை வகித்தார். அப்போது ஏன் மேற்படி அறிக்கை எடுக்கப்படவில்லை?
அல்ஜெஷீரா ஊடக நேர்காணலில் புலிகளுக்கு சார்பான பார்வையாளர்கள் சபையே இருந்தது. ரணிலை அழைத்து, பட்டலந்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தி தற்போது அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளியக பொறிமுறைக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. சாட்சிகள் திரட்டப்பட்டுவருகின்றது. போருக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய தலைவர்கள் மற்றும் படையினரை இலக்கு வைத்தே இந்த பொறிமுறை வகுக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் பட்டலந்த அறிக்கையை வெளியிட்டு, இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடென்பதை காண்பிப்பதற்கு களம் அமைத்தக்கொடுக்கப்பட்டுள்ளது. இது காட்டிக்கொடுப்பாகும்.
மேற்படி அறிக்கையை வெளியிடுவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்தும், இலங்கை தொடர்பில் வெளியக பொறிமுறைக்கு முயற்சிக்கப்படும் முக்கியவேளையில் அறிக்கை வெளியிடப்படுவது சூழ்ச்சியாகும். இதனை கண்டிக்கின்றோம்.” – என்றார்.