பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், மொத்த விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழையே ஆகுமென காய்கறி மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக தக்காளி, கோவா, கிழங்கு, கறிமிளகாய், பச்சை மிளகாய், கத்தரி, போஞ்சி போன்ற காய்கறிகளின் உற்பத்திகள் பாதிப்படைந்துள்ளன.
குறைந்தளவு உற்பத்திகளே விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளதுடன் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விலைகள் அதிகரித்துள்ளன.
இன்றைய சந்தை நிலவரப்படி கத்தரி, கரட், போஞ்சி, பறங்கிக்காய் , கறி மிளகாய், தக்காளி என்பன 1 கிலோகிராம் ரூபாய் 600 தொடக்கம் 650 வரை விற்கப்படுவதுடன் லீக்ஸ் , பீட்ரூட் ,பயிற்றங்காய் என்பன 1 கிலோகிராம் ரூபாய் 500 இற்கு விற்கப்படுகின்றன.
இவ்விலை அதிகரிப்பு இன்னும் ஒருசில மாதங்கள் தொடரலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
சடுதியான விலை உயர்வினால் சாமானிய நுகர்வோர் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
பசறை நிருபர்
