பதுளை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 620 குடும்பங்களுக்கு தமக்கென்ற வாழ்வியலுக்கு வீடுகள் இல்லாத அவலம், மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது தெரிய வந்திருப்பதாக, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.
பதுளை மாவட்ட அரச செயலக கேட்போர் கூடத்தில் 21-04-2021ல் நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான ஆய்வு நிலைக்கூட்டத்தில், பதுளை மாவட்ட அரச அதிபர் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம தொடர்ந்து, தமது ஆய்வு நிலைக்கூட்டத்தின்போது,
‘மாவட்டத்தில் இருபதாயிரத்து அறுநூற்று இருபது குடும்பங்களுக்கு வீடுகள் இல்லாத நிலையில், இவர்களில் பத்தாயிரத்து எழுநூற்று நாற்பத்து எட்டு (10,748) குடும்பங்களுக்கு ஓரளவில் சாதாரண வீடொன்றினையாவது அமைத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கான காணி இல்லாத நிலையும் இருந்து வருகின்றது. மேலும் 136 குடும்பங்கள் ஓலைக்குடில்களில் வசித்து வருகின்றனர்.
பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்களை ஏழு கம்பனிகள் நிருவகித்து வருகின்றன. இக் கம்பனிகள் பொறுப்பில் 63 பெருந்தோட்டங்கள் உள்ளன. இப் பெருந்தோட்டங்களில் முப்பத்தேழாயிரத்து அறுநூற்று ஐம்பத்தைந்து (37,655) குடியிறுப்புக்கள் இருந்து வருகின்றன. இத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் வீடுகளற்ற நிலை காணப்படுகின்றன.
பதுளை மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து ஐநூற்று எழுபத்தொன்பது (2,68,579) குடும்பத்தினர் மொத்தமாக தத்தமது வாழ்வியலை மேற்கொண்டு வந்த போதிலும், இரண்டு இலட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து ஐநூற்று நாற்பத்தொரு (2,43,541) குடும்பத்தினருக்கே வீடுகள் இருந்து வருகின்றனவென்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இம்மாவட்டத்தில் 58 ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்திரண்டு குடும்பங்களுக்கு (58,852) சுத்தமான குடிநீர் வசதிகளற்ற அவல நிலையும் தொடர்ந்த வண்ணமுள்ளது. இத்தொகையானது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் நூற்றிற்கு இருபது வீதமாகும். இவர்கள் ஆறு, நீர் ஓடை, நீர்த்தடாகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் நீரையே குடிநீருக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
தேசிய நீர் வழங்கல் சபை ஊடாக நூற்றுக்கு 30 வீதமான குடும்பத்தினரும், பிரஜா நீர்த் திட்டங்கள் ஊடாக நூற்றுக்கு 27 வீதமான குடும்பத்தினரும், குழாய்க்கிணறுகள் ஊடாக நூற்றுக்கு 23 வீதமான குடும்பத்தினரும் நீரைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், எமது மாவட்டத்தில் 263 குடிநீர் வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 20 வீதமானவர்களான ஐம்பத்தெட்டாயிரத்து எண்ணூற்று ஐம்பத்திரண்டு (58,852) குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இல்லாதுள்ளன. இதனால், சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையிலும் இம்மாவட்டத்தில் அதிகரிப்பு காணப்படுகின்றது.
இத்தகைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பாரிய பொறுப்புக்கள் எம்மைச் சார்ந்ததாகவுள்ளது. அதற்கான முன்னெடுப்புக்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்’ என்றும் கூறினார்.
