ஆசிரியரொருவர் பாடசாலைக்குள்ளேயே, வெளியாரினால் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்த அறிக்கையை, ஓரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசரக் கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து அக்கடிதத்தில், ‘ பண்டாரவளை கல்வி வலயத்தின் பூனாகலை இலக்கம் 1 தமிழ்ப் பாடசாலை ஆசிரியரொருவர், வெளியாட்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட அவ் ஆசிரியர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவத்தைத் கண்டித்து, குறிப்பிட்ட பாடசாலை ஆசிரிய குழாமினர், பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகவும் இருந்து வருகின்றன.
ஆகவே, மேற்படி சம்பவம் தொடர்பாக, ஓரு வாரத்திற்குள் முழுமையான அறிக்கையை, எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு, கேட்டுக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர், ஊவா மாகாண ஆளுனர், கல்வி அமைச்சின் செயலாளர், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
