“பயங்கரவாத தடைச்சட்டம் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல அச்சட்டம் வெகு விரைவிலேயே நீக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் முஸ்லிம்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர் எனக் கூறப்படும் கருத்தை ஏற்கமுடியாது. அவ்வாறானதொரு விம்பத்தை சமூகத்தில் ஏற்படுத்த முற்படவும் கூடாது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்ய வேண்டுமெனில் அது விடயத்தில் இனம் மற்றும் மதம் என்பன தாக்கம் செலுத்தாது. விசாரணை நடவடிக்கை என்பதே முக்கியம். பயங்கரவாத தடைச்சட்டமானது இனத்தை அடிப்படையாகக்கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எமக்கு விமர்சனம் உள்ளது. அச்சட்டத்தை நீக்குவதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையில் நடைமுறையில் உள்ள சட்டத்தைதான் பயன்படுத்த நேரிடும்.” – என்றார்.










