” பாதாள குழு செயற்பாடு மற்றும் போதைப்பொருள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எத்தகைய சவால்கள் வந்தாலும் இது விடயத்தில் பின்வாங்கப்போவதில்லை. ” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும். ஒழுக்க விழுமியமுடைய சமூகமொன்று உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு நாம் உறுதியளித்துள்ளோம். அதற்கமைய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபட்டு பொலிஸார் தற்போது சுயாதீனமாக செயற்பட்டுவருகின்றனர்.
இவ்வாறு சட்டம் தமக்குரிய கடமையை செய்யும்போது சிலருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்தகையவர்களே கலக்கமடைந்து கத்துகின்றனர். எது எப்படி இருந்தாலும் பாதாளகுழு செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 30 ஆம் திகதி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.
சமூகத்தில் சட்டவிரோதமாக புழங்கும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. போதைப்பொருள் வலையமைப்பு அழிக்கப்பட்டுவருகின்றது. இப்பணியை சிறப்பாக முன்னெடுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.










