வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணத்தால் குறித்த ஊடகவியலாளர் மாநாடு இரத்து செய்யப்பட்டது என மொட்டு கட்சியின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தாலும், உயர்மட்டத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமையவே அது பிற்போடப்பட்டது என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து அதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ” கொரோனா நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. எனவே, இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும். ” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கடந்த 12 ஆம் திகதி மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று முன்தினம் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை வலுசக்தி அமைச்சர் நடத்தினார்.
“எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான முடிவை வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே எடுத்தது. அது அரசின் முடிவு. ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்கவே, நெருக்கடியான நிலையிலும் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நான் சுயமாக முன்வந்து விடுத்தேன். எனவே, இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்துக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றேன்.” – என்று கம்மன்பில குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் காமினி லொக்குகேயும், பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் இதில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. கம்மன்பிலவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே குறித்த ஊடக சந்திப்பில் சாகர பங்கேற்கவிருந்தார். எனினும் ,இறுதி நேரத்தில் ஊடக சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பில் சாகர காரியவசத்திடம் வினவியபோது,
” கம்மன்பிலவின் கருத்துகளுக்கு எதிர்காலத்தில் பதில் வழங்கப்படும். அழுத்தம் காரணமாக ஊடக சந்திப்பு இரத்துசெய்யப்படவில்லை.” – என்றார்.










