பிரதமர் பதவியை ஏற்குமாறு அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார். மறுபுறத்தில் அரசியல் சூழ்ச்சிமூலம் ரணிலை பிரதமராக்குவதற்கு ராஜபக்ச தரப்பு நடவடிக்கை விடுத்தது. இவர்களின் இந்த அரசியல் சூழ்ச்சியை மக்கள் உணர வேண்டும் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உரிய வேலைத்திட்டத்துடனும், மக்கள் ஆணையுடனும்தான் நாம் ஆட்சியை பொறுப்பேற்போம். முதலில் வேலைத்திட்டத்தை முன்வைத்து, நாம் ஆட்சியை பொறுப்பேற்கின்றோம், நீங்கள் (கோட்டா) பதவி விலக வேண்டும் எனக் கூறினோம். இதற்கமைய வேலைத்திட்டத்தையும் முன்வைத்தோம். ஆனால் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி ரணில் பிரதமர் பதவியை ஏற்றார். அவருக்குதான் ராஜபக்சக்களும் அதனை வழங்கினர். இதுதான் அவர்களின் அரசியல் சூழ்ச்சி.
ராஜபக்சக்கள், ரணில், பிரேமதாசக்களுக்கிடையில் தற்போது அரசியல் சண்டைபோல் காண்பிக்கப்பட்டாலும், அமெரிக்க தூதரகத்தின் தலையீட்டால் அவர்கள் இணைக்கப்படுவார்கள். உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் வெற்றிபெறும்.
அதேவேளை, இரு மாதங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க, கருத்து கணிப்பொன்றை நடத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் பற்றியே அந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் ரணிலுக்கு 9 வீதம், சஜித்துக்கு 18 வீதம், மொட்டு கட்சிக்கு 7 வீதம், அநுரவுக்கு 43 வீதம் என பெறுபேறு கிடைத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அமைப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்” – என்றார்.
