சமூக மாற்றத்திற்கு அவசியமான நவீன மாணவர்களை உருவாக்குவதென்பது, தரமான பாடத்திட்டங்களைக் கற்றுத் தேறிய, முறையான பயிற்சியைப் பெற்ற ஆசிரியர்களை பாடசாலைக் கட்டமைப்புக்குள் உள்வாங்குவதன் மூலமே சாத்தியமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026.02.16 அன்று ‘இசுருபாய’ கல்வி அமைச்சில், தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பாடத்திட்டங்களை நவீனமயமாக்குவது தொடர்பான வழிகாட்டல் குழு உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு ஆசிரியரும் பட்டதாரித் தகைமை கொண்டவராக இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, கல்வியியற் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் எவ்வாறு நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், கல்வியியற் கல்லூரி டிப்ளோமாவை கல்விமானிப் பட்டமாகத் தரம் உயர்த்தும் போது மாணவர்களின் திறன்களையும் பாடநெறிகளின் தரத்தையும் அளவிடுவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் இதன்போது பிரதமர் குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,
எதிர்காலத்தில் எட்டப்பட வேண்டிய இலக்கான ‘ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு பட்டதாரி’ எனும் எண்ணக்கருவின் முதற்படியாக, கல்வியியற் கல்லூரி பாடத்திட்டங்களை மேம்படுத்துவதைக் குறிப்பிடலாம்.
நிலவும் கால அவகாசம் மற்றும் வளங்களுக்கு ஏற்ப, தேசிய கல்வி டிப்ளோமாவில் இருந்து உயர்கல்வி டிப்ளோமா மற்றும் பட்டம் வரை மூன்று நிலைகளாக இப்பாடத்திட்டங்களை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான முதன்மை ஆணையாளர் பி.டி. இரோஷனி கே. பரணகம உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனம் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










