இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டார்.
மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இந்த முடிவை அறிவித்தார்.
இச்சம்பவத்தின் மூலம் குற்றச் செயல்கள் வெளிவரும் எனவும், அதற்கமைவாக சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடம் வழங்கிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் கடந்த ஆண்டு இறுதியில் பொரளை பொதுமயானத்தில் கார் ஒன்றில் இருந்து குற்றுயிராய் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










