பிரிட்டன் தடை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பலவீனமானதொரு பதிலையே வழங்கியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகள் மூவர் உட்பட நால்வருக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் தமது நிலைந்நாட்டை அரசாங்கம், பிரிட்டன் தூதுவருக்கு நேற்று முன்தினம் தெளிவுபடுத்தி இருந்தது.
இந்நிலையிலேயே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி., அதனை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு,
‘ பிரிட்டனின் தடை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதகமான பதில் இல்லை. பொறுப்பு கூறல் சம்பந்தமாகவும் சர்வதேச தரத்தில் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் தேர்தல்கள் வரவுள்ளன. எனவே, அரசியல் ரீதியிலான நகர்வுகளுக்காக எதிர்காலத்திலும் தடைகள் வரக்கூடும். எனவே, சர்வதேச நிகழ்ச்சி நிரல் தொடர்பில் நாம் புத்தி கூர்மையுடன் செயல்படவேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தக்கு அனுபவம் இல்லை. தூரநோக்கு சிந்தனை கிடையாது. அரசாங்கத்தில் வெளிவிவகாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் செயல்படும் குழு பலவீனமானது. அதனால்தான் வெளிவிவகார அமைச்சு பலவீனமானதொரு பதிலை வழங்கியுள்ளது.” – என்றார்.










