புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் 2021 மார்ச் மாதத்துக்குள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு பின்னரே அது வெளிவரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
புதிய அரசமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைவு நகலை முன்வைப்பதற்காக அரசாங்கத்தால் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் 9 பேரடங்கிய நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.
மேற்படி நிபுணர் குழு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால்மூலம் கருத்துகளை பெற்றுக்கொண்டது. இதன்படி பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்திருந்தனர்.
தற்போது அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் அக்கட்சிகளின் பிரதிநிதிகளுடன், நிபுணர்கள் குழு கலந்துரையாடல்களை நடத்திவருவதுடன், மேலதிக விளக்கங்களை பெறுவதுடன், விளக்கங்களையும் வழங்கிவருகின்றது.
அதன்பின்னர் முக்கியமான சில சிவில் அமைப்புகளையும் நிபுணர்கள் குழு சந்திக்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அத்தகைய சந்திப்புகள் எல்லாம் நிறைவடைந்த பின்னரே நிபுணர்கள் குழுவில், புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் முன்வைக்கப்படும் என அறியமுடிகின்றது.
நிபுணர்கள் குழுவுக்கு ஆறு மாத காலமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அந்த கால எல்லை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கப்படலாம் எனவும், ஜுன் மாதமளவிலேயே ஆரம்ப வரைவு நகல் கையளிக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.
அதேவேளை, டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு உத்தேசித்துள்ளது.










