“ எதிர்வரும் காலத்தில் சமாதான நீதவான்களாக பெண்களை நியமனம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமாக நாம் கருதுகின்றோம். இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் கலந்துரையாடியுள்ளோம். அமைச்சரும் அதனை ஏற்றுக் ஏற்றுக்கொண்டுள்ளார்.” – என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
“ இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு எங்களுடைய பெண்கள் கடந்த 200 வருடங்களாக பங்களிப்பு செய்து வந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
எதிர்காலத்தில் இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு இன்று (17.03.2024) இராகலை நகரில் ஜெமினி மண்டபத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மாற்றத்தை நோக்கிய மலையகம் எனும் தொனிப் பொருளில் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
மகளிர் தினத்தில் விசேட பேச்சாளராக தென்கிழக்கு பழ்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.பேகம் ரஹ1;மான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ராதாகிருஷ்ணன் மேலும் கூறியவை வருமாறு,
“ மலையக மக்கள் முன்னணி அண்மைக்காலமாக ஏற்பாடு செய்துவருகின்ற எல்லா நிகழ்வுகளிலும் மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது .அதற்கு காரணம் மலையக மக்கள் முன்னணி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கட்சி ரீதியாக இன ரீதியாக செயற்பட்டதில்லை. நாம் அனைவரையும் ஒன்றினைத்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றமை அதற்கு முக்கிய காரணம்.
எதிவரும் காலத்தில் சமாதான நீதவான்களாக பெண்களை நியமனம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபா நாள் சம்பளமாக பெற்றுத் தருவதாக கூறியுள்ளது. அதனை நாங்கள் முழுமையாக எற்றுக் கொள்கின்றோம். அதற்கு எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு உண்டு.நாம் எதிர்பார்ப்பது 2000 ரூபா, ஆனால் 1700 கிடைக்குமாக இருந்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றோம்.” – என்றார் இராதாகிருஷ்ணன்.










