பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செம்மணி: தோண்டத் தோண்ட எழும்புக் கூடுகள்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது மேலும் மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் பத்தாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
அகழ்வின் போது மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 42 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், ஞா.ரனித்தா மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர்.
மேலும் நேற்றைய அகழ்வுப்பணிகளின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் மற்றும் தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் வருகை தந்து அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்களை அவதானித்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.