பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கான அவசரகால நிவாரண வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்காகவே குறித்த உதவி வழங்கப்படுகின்றது.
கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான வெளிவிவகார செயலாளர் ரன்தீப் சராய் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேற்படி உதவித் திட்டத்தின் பிரகாரம், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கனடிய மனிதாபிமான உதவி நிதியத்தின் மூலம் அவசரகால நிவாரணப் பொருட்கள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, வேர்ல்ட் விஷன் கனடாவுக்கு 350,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
கனடிய செஞ்சிலுவைச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அவசரகால பேரிடர் உதவி நிதியம் மூலம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க 215,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவசர உதவி வழங்க உள்ளுர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் மூலம் கிட்டத்தட்ட 70,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் அழிவுகள் மிகவும் மனவேதனை அளிப்பதாக கனடிய வெளியுறவுச் செயலர் சாராய் தெரிவித்துள்ளார்.
“இந்த கடினமான நேரத்தில் இலங்கை மக்களுடன் கனடா ஒற்றுமையாக நிற்கிறது. இந்த ஆதரவு உடனடி நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் மீட்பு முயற்சிகள் முன்னேறும்போது உதவ கூடுதல் வழிகளை அடையாளம் காண்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, புயல் சிறிலங்காவில் பல குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு பெரும் துன்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும் மீண்டும் கட்டியெழுப்பவும் உதவுவதில் கனடாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் கனடா நிற்கிறது, சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
அந்த அறிக்கையில், சிறிலங்காவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வளர்ந்து வரும் தேவைகளை மதிப்பிடுவதற்கு அனுபவம் வாய்ந்த மனிதாபிமான கூட்டாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.










