போரை மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டுவந்ததுபோல பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளகூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்றது கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க கட்சி சார்பில் சில வேட்பாளர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர். உரிய நேரம்வரும்போது வெற்றிவேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி நடைபோடுவோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து கூறுவதில் இருந்து விலகி இருக்குமாறு கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் வேட்பாளர் பெயரை, கட்சி முடிவைமீறி அறிவிக்க முடியாது.
மஹிந்த ராஜபக்ச பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியவர். தலா தேசிய உற்பத்தியையும் அதிகரிக்க செய்தார். அப்போது தம்மிக்க பெரேரா மஹிந்த ராஜபக்சவின் செயலாளராகவும், முதலீட்டு சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நாட்டை மீட்கக்கூடிய தலைவராகவே மஹிந்த ராஜபக்சவை அன்று மக்கள் தெரிவுசெய்தனர். அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். போரை முடிவுக்கு கொண்டுவந்தார். அதேபோல பொருளாதார போரை வெற்றிகொண்டு, நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்துவோம்.” – என்றார்.
