பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்பே அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும்!

” பொருளாதாரப் பிரச்சினைக்கே தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரம் ஓரளவு ஸ்தீரத்தன்மைக்கு வந்த பிறகு அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கம் உட்பட அரசமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

“புதிய அரசமைப்பைக் கொண்டுவர வேண்டியது அத்தியாவசியமானதாகும். ஆனால், தற்போது அதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை.

அரசு நியமிக்கப்பட்டு குறுகிய காலமே கடந்துள்ளது. நாட்டில் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பாரிய சவால் பொருளாதாரச் சவாலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான முழு அரசும் அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான பணிகளிலேயே ஈடுபட்டுள்ளது.

அதற்கு இன்னும் காலம் செல்லும். இதன்போது ஏற்படக் கூடிய வழமையான பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றையும் முகாமைத்துவம் செய்து வருகின்றோம்.

பொருளாதாரம் ஓரளவு ஸ்திர நிலைமையை அடைந்ததையடுத்து புதிய அரசமைப்புப் பணிகளை முன்னெடுப்போம். அந்தப் பணிகளையும் நீண்ட நாட்களுக்கு இழுத்துச் செல்ல மாட்டோம்.

குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளிப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

அதற்கமைய நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் பொறுத்தமான அரசமைப்பொன்றை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

அனைத்தையும் ஒன்றுடனொன்று பிணைத்துக் கொண்டு அவற்றை வீணடிப்பதற்கு நாம் தயாராக இல்லை. எனினும், பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கே நாம் முன்னுரிமையளித்துள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles