போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் பொலிஸ் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீது இனந்தெரியாத சிலர் நடத்திய தாக்குதல்களினால் மூவர் காயமடைந்து புத்தளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்திலிருந்து கொட்டுக்கச்சி பிரதேசத்திற்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்வதற்காக சென்றபோதே அவர்கள் மூவரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்ய சென்ற மேற்படி சந்தேக நபர்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றபோது இடையில் மறைந்திருந்த இளைஞர் கும்பலொன்று மேற்படி சிவில் உடைகளில் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளால் மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதனையடுத்து 1990 இலக்க அவசர அம்பியூலன்ஸ் வண்டிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் புத்தளம் அரசாங்க வைததியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
அவர்களுக்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக வார்ட்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
