இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும், தனுஷ்க குணதில்ல 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் அஸ்டன் அகர் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மர்னஸ் லபுஸ்சக்னே19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 301 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பதிலளித்தாட ஆரம்பித்தது.
எனினும், மழை குறுக்கிட்டதால் 12.4 ஓவர்களில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
அதன்போது, ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதையடுத்து, டக்வர்த் லூயிஸ் முறையில் வெற்றி இலக்கு 282 ஓட்டங்களாகக் குறைக்கப்பட்டு, போட்டி 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இரவு 9.10 மணிக்கு மீள ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், 282 ஓட்டங்கள் என்ற புதிய இலக்கை நோக்கித் துடுப்பாடிய ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மெக்ஸ்வெல் 80 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 53 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் துனித் வெல்லாலகே 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை கண்டியில் நடைபெறவுள்ளது.










