இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கும் போர் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் விதமாக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாகவும், மனிதாபிமானமாக நாம் முன்னெடுத்த இந்த யுத்தம் குறித்து எவரும் எமக்கு கற்பித்துத்தர வேண்டிய அவசியம் இல்லை எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் நகர்வுகளை கையாள்வதில் அரசாங்கம் செய்ய வேண்டிய மிகச்சரியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
இராணுவத்தை பாதுகாக்கும் விதமாக அல்லது, இராணுவத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அரசாங்கம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. இது எமக்கும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு காரணியாக நாம் கருதுகின்றோம்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொய்யான சாட்சியங்களை உருவாக்கி இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
புலம்பெயர் அமைப்புகளின் பணம் காரணமாக இங்குள்ள ஒரு சிலரும் இராணுவத்தை குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.எவ்வாறு இருப்பினும் ஒரு சில நாடுகளுக்கு இந்த நாட்டின் அமைதியை சீர்குலைந்து நாட்டில் இன முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்என்ற தேவை உள்ளது.
அதற்கான வெளிப்பாடுகள் இன்று மனித உரிமைகள் பேரவையிலும் வெளிப்பட்டு வருகின்றது. இராணுவம் மீது போர் குற்றங்களை சுமத்தி அதன் மூலமாக இராணுவத்தை பலி தீர்க்க முடியும் என்ற நோக்கம் அவர்களிடம் உள்ளது. ஆனால் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது எமக்கு மட்டுமே தெரியும். மனிதாபிமானமாக நாம் முன்னெடுத்த இந்த யுத்த விதிமுறைகள் குறித்து எவரும் எமக்கு கற்பிக்க வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.










