மட்டக்களப்பில் 14 நாட்களுக்குள் 800 மாடுகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் ஒருவகை நோய் காரணமாக நாளாந்தம் 10 மாடுகள் வீதம் இறக்கின்றன. இதுவரை இவ்வாறு சுமார் 800க்கு மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய பகுதிகளான மேச்சல் தரை பகுதிகளில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதாககால் நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சித்தாண்டி மற்றும் கிரான் கால்நடை திணைக்களப் பிரிவுகளான சந்தனமடு ஆற்றுப்பகுதியை அண்டிய பகுதியான சித்தாண்டி 4ஆம் பிரிவு, ஈரளக்குளம், ஆலையடி, சேரடி, வேறம் பெரியவெட்டை, மற்றும் வட்டுவான், வெள்ளா மைச்சேனை, கூளாவடி, கோரவெளி, மாதந்தனை, மயிலந்தனை மேச்சல் தரை போன்ற பிரதேசங்களில் ஒரு வயது தொடக்கம் ஒன்றரை வயது வரையிலானதும் கர்ப்பிணி மாடுகள், எருமை மாடுகள் மற்றும் பசுமாடுகளும் நோய் தாக்கத்தினால் உயிரிழந்து வருகின்றன.

மாரடைப்பால் சுவாசிக்க முடியாது மாடுகள் இறந்து வருவதாக கூறிய கால்நடை திணைக்கள அதிகாரிகள், அதற்காக தடுப்பூசி ஏற்றியும் வருகின்றனர்.

இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றிய பின்னரும் மாடுகள் வாயால் நுரை வெளியேறி மூக்கால் சுவாசிக்க முடியாது இறந்து வருவதாகவும் சுமார் இருவாரங்களில் 800 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாடுகள் உயிரிழப்பதால் தாம் பலத்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும் முதலில் உயிருடன் இருக்கின்ற மாடுகளை காப்பாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மாடு வளர்ப்போருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கவேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles