” இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் சூழ்நிலை ஒரு மனித பேரவலமாகும். அத்துடன், சர்வதேச பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. புவிசார் அரசியலில் மத்திய கிழக்கில் நிலவும் இந்த ஸ்திரமின்மை சர்வதேச பேரவலமாக விரிவடைவதை தடுப்பது அனைவரின் பொறுப்பாகும். ” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருவதால், உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்கவும், அமைதியான தீர்வுக்கு உடனடியாக தலையிடவும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்க ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மோதல்களினால் களனி பிரதேசத்தைச் சேர்ந்த அனுலா ஜயதிலக என்பவர் உயிரிழந்துள்ளார். வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த யடவர பண்டார என்பவர் காணாமல் போயுள்ளார், மற்றொரு இலங்கையர் காயமடைந்துள்ளார். வட பகுதியிலிருந்து தென் பகுதிக்கு நகரும் மக்களில் 17 இலங்கையர்கள் உள்ளனர்,
இஸ்ரேலில் 8 ஆயிரம் இலங்கையர்கள் உள்ளனர். அவர்களில் ஆயிரம் பேர் சட்டபூர்வமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பயணிக்காதவர்கள் என வெளிநாட்டு பணியகத்திடம் தகவல்கள் இருந்தாலும், சட்ட ரீதியாக சென்றிருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களும் நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களே என்றபடியினால், அவர்கள் அனுப்பும் பணத்தால் நாட்டுக்கு நன்மை பயப்பதால், அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
பொதுமக்களை கொல்வதை நிறுத்துமாறும், குழந்தைகள், பெண்கள் மற்றும் தாய்மார்கள் கைது, மிலேச்சத்தனமான ரொக்கெட் மற்றும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றே பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய அரசுகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன். பயங்கரவாதம் மற்றும் அரச பயங்கரவாதம் ஆகிய இரண்டையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” -எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.










