மத்திய வங்கி ஆளுநராக, கலாநிதி நந்தலால் வீரசிங்க தொடர்ந்தும் நிலைத்திருப்பார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியின் விசேட கூட்டமொன்று நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க, முன்னாள் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியின் எஞ்சிய பதவிக்காலத்தையே தற்போது வகித்துக் கொண்டிருக்கின்றார்.
ஆளுனர் ஒருவரின் ஒரு தவணைக்கான பதவிக்காலம் ஆறு வருடங்களாகும். அந்த வகையில் இம்மாதம் 30ம் திகதியுடன் முன்னாள் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியின் ஆறுவருட தவணைக்காலம் முடிவடைவடைகின்றது.
இதன் காரணமாக அவரது பதவிக்காலத்தை பிரதியீடு செய்துள்ள நந்தலால் வீரசிங்கவின் பதவி இம்மாதத்துடன் முடிவடையும் நிலை காணப்பட்டது.
நந்தலால் வீரசிங்கவுக்கு புதிய பதவிக்கால தவணையொன்றை வழங்கி, அவரை எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு மத்திய வங்கி ஆளுனராக நீடிக்க வைக்ககோரி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜானதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அதேவேளை, மத்திய வங்கி ஆளுநர் பதவியில் மாற்றம் வராவிட்டால், நிதி அமைச்சு பதவியை ரணில் விக்கிரமசிங்க வகிக்கமாட்டார் என தெரியவருகின்றது.
புதிய நிதி அமைச்சு பதவியை ஏற்பதற்கு முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.










