தனது மனைவியை கொலை செய்தார் என சந்தேகிக்கப்படும் கணவன் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வவுனியா, புளியங்குளம் பகுதியிலேயே இன்று காலை இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் , கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குறித்த நபரை உடனடியாக கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அனந்தர் புளியங்குளம் , நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான சுகிர்தரன் சுவர்ணலதா வயது 32 என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு நிலவிவந்துள்ளது.
இந்நிலையில் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவன் , இன்று செவ்வாய்க்கிழமை காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புளியங்குளம் நோக்கி சென்று அங்கு வைத்து கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.










