இலங்கையின் சிரேஷ்ட இடதுசாரி தலைவர்களுள் ஒருவரான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சுகவீனம் காரணமாக தனது 81வது வயதில் நேற்றிரவு காலமானார்.
நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1943ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி லுணுகலையில் பிறந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, மத்துகமவில் தனது ஆரம்பக் கல்வியையும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் பயின்றார்.
அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததுடன், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.
இதனையடுத்து நாடு திரும்பிய அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
1962ஆம் ஆண்டு விக்ரமபாகு கருணாரட்ன, லங்கா சம சமாஜக் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர் தனது காலத்தில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டாலும் அங்கு நீதியின் குரலாக நின்று களமாடிய ஒரு சிறந்த இடதுசாரி அரசியல் தலைவர்தான் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் கொள்கை துறந்து – கோட்பாடு மறந்து குரங்குகள்போல் அங்கும் இங்கும் தாவும் கோமாளி அரசியலை நிராகரிக்கும் – வெறுக்கும் – கொள்கையுடன் செயற்படும் அரசியல் வாதிகளுள் விக்கிரபாகுவும் ஒருவர்.
தமிழ்த் தேசியத்துக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி தீர்வுக்காகவும் தென்னிலங்கையில் இருந்து ஓங்கி ஒலித்த குரல் பாகு தோழர்.
இதனால் அவர் சந்திக்க நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் ஏராளம். சிங்கள புலி, துரோகி என்றெல்லாம் கடும்போக்குடைய இனவாதிகள் அவர்மீது சொற்களைகளைத் தொடுத்தனர்.
2012 இல் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டுக்கு விக்கிரமபாகு கருணாரத்னவும் அழைக்கப்பட்டிருந்தார். இதனால் தென்னிலங்கையில் அவருக்கு எதிராக சில தரப்பினர் போர்க்கொடி தூக்கினர்,
போராட்டங்களை நடத்தினர். எதற்கும் அவர் அஞ்சவில்லை. மாநாட்டில் பங்கேற்று, ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும் பாகுவின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது. சம்பள உயர்வுக்கான போராட்டங்களில் பங்கேற்று தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளார்.
அவரிடம் இன, மத பேதம் கிடையாது, கொள்கைக்கு முதலிடம். மக்களுக்கான அரசியலை செய்தார், மக்களை வைத்து அரசியல் செய்யமுற்படவில்லை. அதனால்தான் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய நவ சமசமாஜக் கட்சிக்குரிய வாக்கு வங்கி குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு இல்லை. ஆனால் கொள்கை மாறா அரசியல் பயணத்தால் இன்றும் போற்றப்படுகின்றார்.
ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர், அரசியல் பழிவாங்கலுக்காக அவரின் விரிவுரையாளர் பதவி பறிக்கப்பட்டது. நல்லாட்சியின்போது அவருக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். மேல் மாகாணசபை உறுப்பினராக இருந்துள்ளார். கடைசியாக தெஹிவளை – கல்கிசை மாநகரசபை உறுப்பினராக இருந்தார். மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைத்து ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.