மலையக மக்களுக்காகவும் குரல் கொடுத்த தலைவர் – திகா இரங்கல்

தமிழினத்தின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மூத்த அரசியல் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு தொழிலாளர் தேசிய சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

இலங்கை வரலாற்றில் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான இரா. சம்பந்தன் அனைத்து இனத்தவராலும் மதிக்கப்பட்ட சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பட்ட ஒரு மாமனிதராவார். அமரர் அப்பாதுரை அமிர்தலிங்கத்துக்குப் பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த பெருமைக்குரியவர்.

திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த அவர் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆகியவற்றை கட்டுக்கோப்போடு வழிநடத்தி வந்ததோடு, பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பாராளுமன்றத்தில் ஆணித்தரமான கருத்துகளை துணிச்சலோடு எடுத்துக் கூறுவதில் இணையற்ற சிறந்த சமூக சிந்தனையாளராகவும், எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒருவராகவும் இருந்து வந்துள்ளார்.

மலையக மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் அரசியல் ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாரினரதும் கட்சியினதும் துயரத்தில் பங்கு கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles