” பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். அதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார். ஜனாதிபதியின் இந்த நகர்வுகளை வரவேற்கின்றோம். பாராட்டுகின்றோம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09.12.2023) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சகல வளங்களுடன்தான் பெருந்தோட்டங்கள், பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் இன்று தோட்டங்கள் மூடப்பட்டுவருகின்றன. இதற்கு தொழிலாளர்கள் காரணம் அல்ல. பெருந்தோட்ட நிறுவனங்களின் வினைத்திறன் அற்ற முகாமைத்துவமே காரணமாகும்.
இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. இது போதுமானது அல்ல. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுத்துவருகின்றோம். தொழில் அமைச்சருடனும் பேச்சு நடத்தியுள்ளோம். ஒன்று கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், இல்லையேல் சம்பள நிர்ணயசபை ஊடாக அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் கூறினோம். கம்பனி தரப்பில் இரு வாரங்கள் அவகாசம் கோரப்பட்டன.
இந்நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதானிகளுடன் ஜனாதிபதி நேற்று பேச்சு நடத்தினார். குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு விடுத்துள்ளார். மலையக மக்கள் சார்பிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். அவர் அதனை நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. காணி உரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை, அவுட்குரோ முறைமையில் செல்வதற்கே பெருந்தோட்டக் கம்பனிகள் முற்படுகின்றன. அதாவது ஆயிரம் தேயிலைச் செடிகளை கொடுத்துவிட்டு, தொழிலாளர்களிடம் இருந்து 50 ரூபாவுக்கு கொழுந்து வாங்கும் முறைமையை ஏற்க முடியாது.
பெருந்தோட்டக் காணிகள் குத்தகை அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 10 நாட்கள் ஈ.பி.எப், ஈ.டி.எப்புடன் தோட்டத்தில் வேலை அவசியம். எஞ்சியுள்ள நாட்களில் அவுட்குரோ முறைமைக்கு செல்லலாம். தனியார் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கும் விலைக்கே தொழிலாளர்களிடம் இருந்து கொழுந்து வாங்கப்பட வேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவான விவசாயிகள் உள்ளனர். சீரற்ற காலநிலையின்போது அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மானிய விலையில் உரம் வழங்கப்பட வேண்டும்.
பால் உற்பத்திலும் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறுகின்றது. கால்நடை வைத்தியர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. அப்பிரச்சினைக்கும் தீர்வு அவசியம்.” – என்றார்.