” மலையகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்கூட்டியே கூறியிருந்தோம்.இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்து அமைச்சின் ஊடாக தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தினோம்.”
இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்த காளியம்மா இன்று உயிரிழந்ததைப் போன்று, நாளை மண்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் காணி அமைச்சர் ஹரீனுடனும் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்கொண்டு பேசியதாகத் தெரிவித்த ஜீவன் தொண்டான், இதற்கு உடனடியாக தீர்வை எடுக்க வேண்டும் என்றும் ஏனெனில் நாட்கள் செல்ல செல்ல இதன் ஆபத்து அதிகம் என்றார்.
