மலையகத்தில் தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலையினையடுத்து காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பல ஏக்கர் வன பிரதேசங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தொடர்ச்சியாக இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. ஆகவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினமும் (01) டயகம டெவிட் பண்ணை பகுதியில் இனந்தெரியாத விசமிகளால் அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக பல ஏக்கர் வன பிரதேசங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இதனால் இப்பகுதியில் உள்ள பெறுமதிமிக்க மரக்கன்றுகள் அழிந்து போய் உள்ளதுடன் சிறிய வகை உயிரினங்கள் நீரூற்றுக்கள், அரிய வகை தாவரங்கள் ஆகியன அழிவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
தற்போது வரட்சியான காலநிலையினையடுத்து பல பிரதேசங்களில் குடி நீர் தட்டுப்பாடு நிலவுவதனால் இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம்.
எனவே இந்த காடுகளுக்கு தீ வைப்பதனை உடன் நிறுத்த வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.










