மாணவர்களின் போதைப் பொருள் பாவனையை    அதிரடிப்படை உதவியுடன் ஒழிப்பதற்கு திட்டம் – குழந்தைவேல் ரவி

பொகவந்தலாவ பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையால் புற்று நோய்க்கு ஆளாகி உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பிரதேசத்தில் உள்ள பொலிசார் மற்றும் அதிரடைப்படையினருடன் இணைந்து ஒழிப்பதற்கு   நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் கே. குழந்தைவேல் ரவி வியாழக்கிழமை (9) இடம்பெற்ற சபையின் மாதாந்த அமர்வில் பேசும் போது தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் அதிகரித்து விலைவாசி மற்றும் காகிதாதிகள் தட்டுப்பாடு காரணமாக பிரதேச சபையின் செலவினங்களை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் தீர்மானித்துள்ளோம். அதன் ஒரு கட்டமாக இனிமேல் மாதாந்த அறிக்கைகள் அச்சிட்டு அனுப்பப்பட மாட்டாது. அவற்றை உறுப்பினர்கள் தமது கைபேசியில்வட்ஸ் அப்ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், அரசாங்கத்தின் நிதி உரிய முறையில் கிடைக்காத பட்சத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடிய நிலையும் காணப்படுகின்றது. எனினும், அத்தியாவசிய அவசர இடர்க்கால நிவாரணப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படும்.

பொகவந்தலாவ நகரில் அமைக்கப்படும் 21 கடைத் தொகுதிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குத்தகைக்கு விடுவதன் ஊடாக 20 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும். அவற்றை வழங்கும் போது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேபோல், நோர்வூட், காசல்ரீ பகுதிகளிலும் கடைத் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொகவந்தலாவ பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டு வருகின்றது. இங்குள்ள பிரபல பாடசாலை ஒன்றில் போதைப் பொருள் பாவனையால் இரண்டு மாணவர்கள்  புற்று நோய்க்கு ஆளாகி உயிருக்கு ஆபத்து ஏற்படும் மோசமான நிலைமை உருவாகியுள்ளது. பாதிக்கப்படும் மாணவர்களோடு நகரங்கள், தோட்டங்களில் உள்ள இளைஞர்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பிரதேச சபைக்கு இருக்கின்றது.

எனவே, பொகவந்தலாவ பிரதேச பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்போடு, போதைப் பொருள் பாவனையை ஒழிக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். அத்தோடு, ஒவ்வொரு வட்டாரத்திலும் விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொள்ள உறுப்பினர்கள் எடுக்கும் நடவடிகைகளுக்கு பிரதேச சபையின் ஊடாக தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றார்.

Related Articles

Latest Articles