மாத்தளை வடிவேலனின் நூல் வெளியீட்டு விழா இன்று மாத்தளையில் (03.03.2023) நடைபெறுகின்றது. மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக பஞ்சஇரத பவனியை முன்னிட்டு ‘மலையகம் 200 இலங்கை இந்திய வம்சாவளி தமிழர் வரலாற்றில் முதல்சாசனம் மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்’ என்னும் நூல் அம்பாளின் சந்நிதியில் படைத்து அர்ச்சித்து இன்று 03.03.2023 வெளியிடப்படுகிறது.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் சேதுராமன் சர்வானந்தா முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா. ரமேஷ் சிறப்பு அதிதியாக கலந்து கொள்கிறார்.
அறங்காவலர் சபையின் உறுப்பினர்கள், இந்து சமய நிறுவனங்களின் பிரதிநிதிகள், அறநெறி பாடசாலை அதிபர்கள், ‘சுபீட்சம்’ கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர், மகாத்மா காந்தி சபைத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புப் பிரதிகளைப் பெற்று கொள்கின்றனர்.
மலையகத் தமிழரின் பூர்வீக குடியேற்ற வரலாற்றை எடுத்தியம்பும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிகளிலான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
வீரகேசரி முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசனின் வாழ்த்துரையுடனும், பதிப்பாளரும் வெளியீட்டாளருமான எச். எச். விக்கிரமசிங்க அவர்களின் அணிந்துரையுடன் இந்நூல் வெளிவருகிறது.
