முறைப்பாடளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொது மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கையொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ள பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடம், முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்களும் கிடைத்துள்ளன.
பொலிஸ் நிலையங்களில் பதிவாகும் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
அதன்படி, இனி பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாது நிராகரிக்க முடியாது என பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.