மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை மீண்டும் காட்டுமா அரசு?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு உட்பட பிரதான சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமானது. மாலை 5.30 மணிவரை விவாதம் தொடர்ந்தது. ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக எதிரணி உறுப்பினர்களும், எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களும் உரையாற்றியதுடன் அதற்கான காரணங்களையும் முன்வைத்தனர்.

இன்று இரண்டாவது நாளாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது விவாதம் தொடரவுள்ளது.

இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக  அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் வாக்களிக்கவுள்ளன.

அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய சில எதிர்க்கட்சிகளும் எதிராக வாக்களிக்கவுள்ளன.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை முன்வைத்துள்ளார். அமைச்சர் என்பதற்கு பதிலாக அமைச்சர்கள் என்பதை உள்ளடக்குமாறு குறிப்பிட்டு குறித்த பிரேரணையை ஒட்டு மொத்த அமைச்சரவைக்கு எதிரான பிரேரணையாக மாற்றுவதற்கு முற்பட்டார்.

குழுநிலையின்போது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இது அரசுக்கு எதிரான பிரேரணையாக மாறும். எனினும், ரணிலின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ரணிலின் இந்த நகர்வு அரசைக்காக்கும் முயற்சி என ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிக்கப்படும் என அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles