பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும், அவர்களின் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வின்சன் பெர்ணாண்டோ அடிகளார் பொறுப்பேற்றுள்ளார்.
ஈயூனியா (09 வயது), ஆரோன் (08 வயது) , இவாஞ்சலினா (04) ஆகிய மூன்று பிள்ளைகளுமே ஆயரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வைத்தியர் ஒருவர் இம்மூன்று பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் நேற்று (27) பதுளை மாவட்ட கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரினால் பிள்ளைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது தாத்தா ( செபஸ்டியன் பெனடிக் (70 வயது ), பாட்டி ஐயாசாமி செல்வநாயகி (63) ஆகியோரின் அரவணைப்பில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.
இக்குடும்பத்திற்கான அத்தியாவசிய தேவைகள் பதுளை மறைமாவட்ட மேதகு ஆயரின் ஆதரவில் லுணுகல புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தையூடாக முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி இப்பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் முழுகவனமும் ஆயரினால் கண்காணிக்கப்படவுள்ளது.
பிள்ளைகளில் ஈயூனியா நான்காம் தரத்திலும், இவாஞ்சலினா மூன்றாம் தரத்திலும் லுணுகல இராமகிருஸ்ணா இந்து கல்லூரியில் கல்வி கற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும் குடும்ப வாழ்வாதார தேவைகளுக்கும் உதவுவதற்கு முன்வருவோர் ஆயரினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அறக்கட்டளை நிதியத்தினூடாக உதவ முடியும்.
கடந்த சனிக்கிழமை ( 20/03) பசறையில் நிகழ்ந்த விபத்தில் அந்தனி நோவா – பெனடிக் மெடோனா தம்பதியினர் உள்ளடங்ளாக 14 பேர் பரிதாபமாக பலியாகிய சோகசம்பவம் முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடராஜா மலர்வேந்தன்