” சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியும் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ரஞ்சன் ராமநாயக்க கொள்ளை அடித்துவிட்டோ, ஊழல், மோசடியில் ஈடுபட்டுவிட்டோ, சமூக விரோதச்செயலை முன்னெடுத்தோ சிறை தண்டனையை எதிர்கொள்ளவில்லை. மாறாக அரசியல் விடயங்களுக்காகவே தண்டனையை அனுபவிக்கின்றார். நீதிமன்ற தீர்ப்பை நாம் விமர்சிக்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் கூறியாகவேண்டும்.
ரஞ்சன் ராமநாயக்க ஊழல், மோசடிகளுக்கு எதிராக போராடியவர். தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவரே கூறியுள்ளார். அதேபோல கடந்தகாலங்களில் சிறைச்சாலைக்குள்ளேயே கைதிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெளியில் அழைத்துசெல்லப்படும் சந்தர்ப்பங்களிலும் அவ்வாறு நடந்துள்ளன. எனவே, ரஞ்சனினுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். அவரின் உயிர் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும்.
ரஞ்சன் மக்களால் விரும்பப்பட்ட ஒருவர். எனவே, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே இந்த கோரிக்கையை விடுத்தோம். மீண்டும் ஒரு முறை முன்வைக்கின்றோம். ஜனாதிபதி இதனை செய்தால் மக்கள் எதிர்க்கமாட்டார்கள். மாறாக ஜனாதிபதிக்கான புகழ் அதிகரிக்கும்.”- என்றார்.