” ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையேற்று ரணில் விக்கிரமசிங்க 27 ஆண்டுகள் அரசியல் புரட்சிசெய்தார். அதன் விளைவு அக்கட்சி இன்று பூஜ்ஜிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க, அரசியலில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவார் என விடுக்கப்படும் அறிவிப்புகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ரணில் விக்கிரமசிங்கவால் இன்னும் ஒருதடவைகூட ஜனாதிபதியாக முடியவில்லை. பலமான எதிரணியையும் அவர் கட்டியெழுப்பவில்லை. எதிரணிக்குரிய பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியே இனி நிறைவேற்றும்.
ரணில் 27 வருடங்கள் புரட்சி செய்தார்தான். ஆனால் கட்சி பூஜ்ஜிய நிலைக்கு இன்று வந்துள்ளது. மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால்தான் நாம் ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்படுகின்றோம்.
ரணில்மீது மதிப்பு உள்ளது. ஆனால் அரசியல் ரீதியில் கொள்கை ரீதியில் முரண்பாடு உள்ளது.” – என்றார்.
அதேவேளை, அரசுடன் ‘டீல்’ வைத்துக்கொள்ளாமல் எதிரணியாக சஜித்தின் தலைமைத்துவத்தின்கீழ் பயணிக்க ரணில் விக்கிரமசிங்க முன்வரவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
