ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட்டால் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பலர் வருவார்கள், சிறு கட்சிகளும் இணையும். அவ்வாறு பெயரை அறிவிக்காவிட்டால் மாற்றம் எதுவும் நடக்காது.
எனவே, ராஜபக்சக்கள் ஒரு அடி பின்வாங்கி, நாடு பற்றி யோசித்து முடிவை எடுக்க வேண்டும். ரணிலை வேட்பாளராக அறிவிப்பது நல்லது. அதேபோல மொட்டு கட்சியின் ஆதரவை பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் முழு வீச்சுடன் செயற்பட வேண்டும்.
சிலவேளை ரணிலுக்கு பதிலாக மற்றுமொரு வேட்பாளரை மொட்டு கட்சி நிறுத்தினால் அது சாதகமற்ற முடிவாகவே அமையும். மொட்டு கட்சி தோற்கும், ரணிலும் தோற்பார். சஜித் வெற்றிபெறுவார். ஜே.வி.பி. இரண்டாம் இடத்துக்கு வரக்கூடும்.” – என்றார்.










