ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதியதொரு அரசியல் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான முயற்சி இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்த அணியின் தலைமைப்பதவி முன்னாள் அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்படவுள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவே இதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த கூட்டணி உருவாகவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
அநுர யாப்பா அணியில் தற்போது எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதிக்கு தற்போது ஆதரவு வழங்கும் மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலரும் இந்த கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக இன்னும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
