மஹிந்த ஆட்சியின்போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட 14 அமைச்சர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி அலிசப்ரீக்கு நீதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹரின் பெர்ணான்டோ மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது கருத்துவெளியிட்ட ஹரின் பெர்ணான்டோ இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” அலி சப்ரி என்பவர் முஸ்லிம், அதனால் அவரின் நியமனத்தை நாம் எதிர்க்கவில்லை. ஏனெனில் எமது கட்சியிடம் இனவாதம, மதவாதம், குலபேதம் என்பன கிடையாது. கொள்கை அடிப்படையிலான அரசியல் பயணமே முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு சார்பாக செயற்பட்ட அலிசப்ரி, ராஜபக்ச ஆட்சியில் ஊழல், மோசடியில் ஈடுபட்ட 14 அமைச்சர்களுக்கு எதிராக நல்லாட்சியில் வழக்கு தொடுத்தபோது அவர்கள் சார்பிலும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
நீதிமன்றம்தான் நாட்டின் காவல் தெய்வம். அப்படியானதொரு ஸ்தானமும் உள்ளடங்கும் நீதி அமைச்சு பதவிக்கு தமது விசுவாசியொருவரை ராஜபக்சக்கள் நியமித்திருப்பது பாரதூரமான விடயமாகும்.
முக்கிய அமைச்சுகள் ராஜபக்ச குடும்பத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. இதற்காகவா மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் வழங்கப்பட்டது? காற்று, களிமண், பித்தளை, பிரம்பு, வெங்கலத்துக்கெல்லாம் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உலகில் எந்தவொரு நாட்டிலும் இப்படியான அமைச்சுகள் இல்லை. பதவி ஏற்றவர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.வியத்மக உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவில்லை.” – என்றார்.