” உரிய நேரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். எனவே, அதனை எதிர்கொள்ள தயாராகவே இருங்கள்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு, ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ” கொரோனாவை காரணம்காட்டி உள்ளாட்சிசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரச்சாரக் கூட்டம் நடத்துகின்றது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,
” தேர்தல்களை எதிர்கொள்ள ராஜபக்சக்கள் ஒருபோதும் அஞ்சியது கிடையாது. முன்கூட்டியே தேர்தலை நடத்தி வீட்டுக்கு சென்ற தலைவர்கள் அவர்கள். எனவே, எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள நாமும் தயார். உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தயாராகவே இருங்கள். அதேபோல தேர்தல் நடத்தப்பட்டால் அதில் எமக்கு வெற்றி உறுதி என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.” – என்றார்.










