மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பானது தேர்தலை இலக்கு வைத்து வழங்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியாகும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாரம்பரம் தெரிவித்தார்.
“ தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என கொட்டகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின்போது ஜனாதிபதி உறுதியளித்தார். இதனையடுத்து அப்பாவி மக்களை வைத்து சிலர் பாற்சோறு சமைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கூறியது பொய் என்பது 10 ஆம் திகதி தெரியவந்துவிட்டது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியாது என்ப ரணிலுக்கு தெரியும். அதனால்தான் மலையக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறும் நோக்கி, இந்த போலி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களை ஏமாற்றும் வேலை தொடர்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கை எமது ஆட்சியில் முன்னெடுக்கப்படும்.” – எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.
