மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை அகற்றுவதன் மூலம் பயனாளிகளுக்கு இலகுவான முறையில் வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பொறிமுறையை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
” வாகனங்களைப் பதிவு செய்யும்போது வாகன இலக்கத் தகடுகளுக்கு மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் புகைப்பரிசோதனை மற்றும் வருடாந்த வருமானவரிப் பத்திரம் வழங்குவதற்கு இலகுவாக இருக்கின்றது.
எனினும், மாகாணங்களுக்கிடையிலான வாகன உரித்தை மாற்றும் ஒவ்வொரு தடவையும் வாகன இலக்கத்தகட்டை மாற்ற வேண்டியுள்ளதால், சேவை பெறுநர்களும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான வாகன இலக்கம் வழங்கப்படுவதால், திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தின் மூலம் சரியான வகையில் தனித்துவத்தை அடையாளங் காணக்கூடிய வசதிகள் உண்டு. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றும் கூறப்பட்டது.










