யாழ். வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களுடன் நடமாடிய மூவரில் ஒருவர் ஊர் இளைஞர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.
சங்கரத்தைச் சந்தியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை தெற்கு மற்றும் மூளாய் பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு வாள்களுடன் நடமாடியுள்ளனர்.
அதனை அவதானித்த வட்டுக்கோட்டை இளைஞர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு வழிமறிக்க முற்பட்டவேளை மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி வீதியில் அவர்கள் வீழ்ந்துள்ளனர்.
அவர்களில் இருவர் வாள்கள் இரண்டைக் கைவிட்டு தப்பித்த நிலையில் ஒருவர் காயங்களுடன் சிக்கிக்கொண்டார்.
வாள்களுடன் சிக்கிக்கொண்ட மூளாயைச் சேர்ந்தவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இரண்டு வாள்களையும், மோட்டார் சைக்கிளையும் அங்கிருந்து பொலிஸார் எடுத்துச் சென்றனர்.










